அமைச்சர் சேகர்பாபு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அவருடைய அலுவலகத்துக்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன் மூலம், தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி, கமல்ஹாசன் ராஜ்ய சபா எம்.பி. ஆகிறாரா என்ற கேள்விகள் அரசியல் களத்தில் எழுந்துள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்ற ம.நீ.ம-வுக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, ம.நீ.ம-வுக்கு ஒரு ராஜ்ய சபா எம்.பி பதவி அளிப்பது என்று ஒப்பந்தமானது.
மக்களவைத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், வருகிற ஜூலை மாதத்துடன் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 ராஜ்ய சபா எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனால், அடுத்து, ராஜ்ய சபாவுக்கு செல்லும் 6 எம்.பி.க்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அவருடைய அலுவலகத்துக்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். இதனால், அமைச்சர் சேகர்பாபு - கமல்ஹாசன் இருவரின் இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
ஜூலை மாதம் ராஜ்ய சபாவில் தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக் காலம் முடிவடைவதால், மக்களவைத் தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்படி, ம.நீ.ம-வுக்கு ராஜ்ய சபா எம்.பி. அளிப்பதற்கான கிரீன் சிக்னல் சந்திப்பா இது என்ற பேச்சுகள் தமிழக அரசியலில் எழுந்துள்ளன. மேலும், ம.நீ.ம-வுக்கு ராஜ்ய சபா எம்.பி அளிக்கப்பட்டால், அப்பதவிக்கு கமல்ஹாசன் தேர்வாக வாய்ப்பு உள்ளதால், கமல்ஹாசன் ராஜ்ய சபா எம்.பி. ஆகிறாரா என்ற எதிர்பார்ப்புகளும் நகர்கவுகளும் தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளன.
இருப்பினும், சேகர்பாபு - கமல்ஹாசன் சந்திப்பு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார். தலைவரின் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உடன் இருந்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.