/indian-express-tamil/media/media_files/2025/03/18/lDYROnV0QzcMrkKwEIBR.jpg)
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. நடத்தும் போராட்டத்துக்குச் சென்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை, அக்கரை அருகே தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். கைது செய்யப்பட்ட பாஜக வினரை மாலை 6 மணி ஆகியும் விடுவிக்காததால் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலை - போலீசார் இடையே நீண்டநேர வாக்குவாதத்துக்குப் பிறவு இரவு 7 மணிக்கு அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.வினரை போலீசார் விடுதலை செய்தனர்.
இதனிடையே, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “நாட்டுக்காகப் போராடுவதாகக் கூறும் அண்ணாமலையால் 5 மணி நேரம் காவலில் இருக்க முடியவில்லை. எங்கள் முதல்வர் திருமணமான ஓராண்டு காலத்தில் மிசாவில் கைதாகி சிறைச்சாலையில் கழித்தவர். முதல்வருக்கு எதிரான போராட்டம் இந்த மண்ணிலேயே எடுபடாது. 5 மணி நேரம் கூட போலீஸ் காவலில் இருக்க முடியாத அண்ணாமலை, நாட்டிற்காக எப்படி உழைப்பாய்? ஒரு அண்ணாமலை அல்ல 100 அண்ணாமலை வந்தாலும் சந்திப்போம் என்றார்.
2 மொழிப்போராட்டங்கள், எமெர்ஜென்சியை கண்ட இயக்கம்தான் தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோதும் கொள்கைக்காக சமரசம் செய்யாத இயக்கம். தி.மு.க என்ற வாள்.. போர் வரும்போது அதன் உறையில் இருந்து வெளியே வரும். தமிழக மண்ணிலேயே அனைத்து போராட்டங்களிலும் களத்திலேயே நின்று இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர் முதல்வர் ஸ்டாலின் என்றார் சேகர்பாபு.
தொடர்ந்து அவரிடம் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படம் அடித்து மாட்டப்படும் என அண்ணாமலை கூறியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், மானங்கெட்ட அண்ணாமலை உத்தரப் பிரதேசத்துக்கு சென்று பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் அங்குள்ள முதல்வர் படத்தை அடித்து மாட்டட்டும். நாங்கள் வேண்டுமானால் கூட ஆணியை சப்ளை செய்கிறோம். அதற்கு பிறகு இங்கே வரட்டும் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.