சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி தாக்கல் செய்த மனுவை வேறு நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி எம்.எஸ். ரமேஷ் உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு காண்டிராக்டர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர், ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 147 கோடி ரூபாய் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும், சுமார் 34 கோடி ரூபாய்க்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 178 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், 34 கோடி ரூபாய் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான 24 நாட்களில் மாற்றப்பட்டது குறித்து சரியாக சேகர் ரெட்டி உள்ளிட்டோர் பதிலளிக்க வில்லை. இதுகுறித்து சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து, சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், மோசடியான வகையில் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டத்துக்கு புறம்பாக வருமானம் சேர்த்தது ஆகிய குற்றச்சாட்டுகள் கீழ் இவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து, மத்திய அமலாக்கத்துறையும், இந்த விவகாரம் தொடர்பாக, சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது. இதில் அமலாக்க துறை சார்பில் பதிவு செய்த இந்த வழக்கை ரத்து செய்யக்கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மனு தாக்கல் செய்தார்.
அதில் விதிகளுக்கு புறம்பாக தன்மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும். சட்டத்திற்கு புறம்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை கீழ் தனக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம். எஸ். ரமேஷ் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தொடர்ந்து இந்த வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை எனவும் இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக கூறினார்.