/indian-express-tamil/media/media_files/e7Qof5kgiT0YmBYs6GU2.jpeg)
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தமிழகம் மட்டுமல்லாது அண்டை நாடுகள் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினம் தோறும் ரங்கநாதரை வழிபட்டுச் செல்வதால் ஆங்காங்கே தேவையற்ற பொருட்கள் மிகுதியாக சேர்ந்து விடுகின்றன. அந்தப் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த 120 தூய்மை பணியாளர்கள் சமீபத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அது முதல் ஸ்ரீரங்கத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 120 தூய்மை தொழிலாளர்களுக்கு வேலை வழங்காத ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலைக்கு ஆள் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,
120 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு நேரடியாக தலையிட வலியுறுத்தியும், தொழிலாளர் களின் வறுமையை வெளிப்படுத்தும் வகையில் சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம் தலைமையில் தூய்மை பணியாளர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் அருகே இன்று கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். போராட்டத்தை சங்க மாவட்ட செயலாளர் மாறன் துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, வாலிபர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சந்துரு, சிஐடியு நிர்வாகிகள் சுப்பிரமணி, கோவிந்தன், செல்லமுத்து, முத்து, கணேசன் ஆகியோர் பேசினர்.
அனுமதியின்றி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.