/tamil-ie/media/media_files/uploads/2017/09/Sellur-raju.jpg)
நகரத்தார் சமூகத்தினரிடம் வருத்தம் தெரிவித்தார், அமைச்சர் செல்லூர் ராஜூ. மனோரமாவையே ‘ஆச்சி’ என குறிப்பிட்டதாக விளக்கம் அளித்தார் அவர்!
செல்லூர் ராஜூ-வுக்கு சர்ச்சை என்றால், சர்க்கரைப் பொங்கல் மாதிரி! தெர்மோகோல் விவகாரத்தை அடுத்து நகரத்தார் சமூகத்தினரை குறிக்கும் வகையில் அவர் அளித்த பேட்டி, அந்த சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜு நிருபர்களிடம் கூறுகையில், “ரஜினி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்” என்று கருத்து தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்துக்கு காரைக்குடி நகரத்தார் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
செல்லூர் ராஜூவுக்கு எதிராக பெண்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அமைச்சர் செல்லூர் ராஜூக்கு செருப்புகளையும் பார்சலில் அனுப்பினர். அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நகரத்தார் சங்கம் புகார் அனுப்பியது.
நகரத்தார் சமூகத்தினர் வெளிப்படுத்திய எதிர்ப்பை தொடர்ந்து, அமைச்சர் செல்லூர்ராஜூ விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ‘அ.தி.மு.க. பெண்ணை தாயாக, தெய்வமாக மதிக்க கூடிய இயக்கமாகும். நாட்டிலேயே பெண்ணுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு ஆட்சியிலும், கட்சியிலும் தந்தவர் அம்மா. எனவே நாங்கள் ஒருபோதும் பெண்களை தவறாக பேச மாட்டோம்.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது தமிழகத்தில் அவர் ஆட்சியை பிடிக்க முடியாது. வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று நான் கூறியது ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அல்ல. ஆச்சி என்றாலே சினிமாவில் மனோரமாதான் நினைவுக்கு வரும்.
சினிமாவில் மனோரமாவை தாயாக கட்டிப்பிடித்து நடித்தார் ரஜினி. எனவே மனோரமாவை மனதில் வைத்தே இந்த கருத்தை தெரிவித்தேன். மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.’ இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.