Advertisment

செல்வமகள் சேமிப்பு திட்டம்: பேத்தி பெயரில் தொடங்கிய கணக்கு நிறுத்தம்; அஞ்சல் துறைக்கு ரூ. 3 லட்சம் அபராதம் - திருச்சி கோர்ட்

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் தனது பேத்தியின் பெயரில் கணக்கு தொடங்கி பணம் செலுத்தி வந்த நிலையில், அவருடையக் கணக்கை நிறுத்திய அஞ்சல்துறைக்கு திருச்சி நீதிமன்ற நுகர்வோர் ஆணையம் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy court.jpg

 

Advertisment

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் தனது பேத்தியின் பெயரில் கணக்கு தொடங்கி பணம் செலுத்தி வந்த நிலையில், அவருடையக் கணக்கை நிறுத்திய அஞ்சல்துறைக்கு திருச்சி நீதிமன்ற நுகர்வோர் ஆணையம்  ரூ. 3 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

அஞ்சல் துறையின் செல்வ மகள் சேமிப்பு திட்டமானது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு ஒரு நல்ல சேமிப்பு திட்டம். ஒரு பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டும் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பெயரில் செல்வமகள் திட்டத்தின் மூலம் அஞ்சல் அலுவலக்த்தில் குறைந்த பட்சம் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, இந்த செல்வமகள் கணக்கு தொடங்கி செலுத்தலாம். இந்த தொகையை மாதா மாதம் செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. ஆண்டுக்கு மொத்தமாகவும் செலுத்தலாம். 

இந்த செல்வ மகள் திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு ஒரு குழந்தையின் பெயரில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம். செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கணக்கு முதிர்வு காலம், கணக்கு தொடங்கப்பட்ட நாளில் இருண்டு 21 ஆண்டுகளில் முதிர்வடையும். அதே நேரத்தில், கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்பு தொகையை செலுத்த முடியும். பெண் குழந்தை 18 வயதை எட்டும்போது அவர்களுடைய கல்வி செலவுக்கு செல்வ மகள் திட்டத்தில் செலுத்தப்பட்ட தொகையில் இருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம். குழந்தை பிறந்து 10 ஆண்டுகளுக்குள் செல்வ மகள் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளை மட்டுமே இணைக்க முடியும். பெண் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாமல், சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாகவும் கணக்கு தொடங்கலாம். செல்வ மகள் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 250 செலுத்தலாம்.

செல்வ மகள் திட்டத்தில் செலுத்தப்படும் தொகையானது, முதலீட்டின் மீது கிடைக்கும் வட்டி, முதிர்வு தொகை என அனைத்துக்குமே வரி விலக்கு உண்டு என்பதால் மக்களிடையே இந்த திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு பெண் குழந்தை, அல்லது இரண்டு குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் பலரும் செல்வமகள் திட்டத்தில் குழந்தைகளின் பெயரில் அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு தொடங்கி சேமிப்புத் தொகையை செலுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், திருச்சியில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அளித்த தீர்ப்பு கவனம் பெற்றுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா நகரைச் சோ்ந்தவா் எஸ். ரங்கராஜன் (65 வயது), இவர் கடந்த 2015-ம் ஆண்டு, ஈரோடு எஸ்.பி.பி காலனியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில், தன்னுடைய பேத்தி (மகளின் மகள்) பெயரில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கினார். 

செல்வ மகள் திட்டத்தில் கணக்கு தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தாா். தற்போது தனக்கு வயதாகிவிட்டதால் தன்னுடைய பேத்திக்கு பாதுகாவலராக (கார்டியன்) தன்னுடைய மகளை நியமனம் செய்யும்படி அஞ்சல் அலுவலகத்தில், கடிதம் அளித்தார். ஆனால், அஞ்சல் துறை ரங்கராஜன் தனது பேத்தி பெயரில் கணக்குத்தொடங்கி பணம் செலுத்தி வந்தது தவறு என்றும், சிறுமிக்கு தாய் அல்லது தந்தை 2 பேரில் ஒருவா்தான் கணக்கு தொடங்க முடியும் என்றும் கூறியுள்ளது. மேலும், ரங்கராஜன் அதுவரை செலுத்தி வந்த தொகைக்கு வட்டி எதுவும் இல்லாமல் திரும்ப பெற்றுக்கொள்ளும்படி கூறி அவரது சேமிப்பு கணக்கையும் நிறுத்திவிட்டது. 

சுமார் 9 ஆண்டுகள் செல்வ மகள் திட்டத்தில் தனது பேத்தியின் பெயரில் கணக்கு தொடங்கி சேமிப்பு தொகையை செலுத்தி வந்த நிலையில், அஞ்சல் அலுவலகம் இப்படி கூறியதைக் கேட்டு அதிர்ந்து போன ரங்கராஜன், இதுகுறித்து திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினா்கள் ஆா். காந்தி, ஜே.எஸ். செந்தில்குமாா், ஆா். சாயீஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. 

விசாரணைக்குப் பிறகு அமர்வு கூறியதாவது: அஞ்சல் துறையின் உத்தரவு எதேச்சதிகாரமானது. தாத்தா, பேத்தி பெயரில் கணக்கு தொடங்க முடியாதென்றால், அதை அஞ்சல்துறை கணக்கு தொடங்கும்போதே சொல்லியிருக்கலாமே? அப்படி தாத்தாவிடம் தெரிவிக்காமல் விட்டது வங்கியின் சேவைக் குறைபாடாகும். 

எனவே, பேத்திக்காக, அவரது தாத்தா தொடங்கிய சுகன்யா சம்ருதி கணக்கை தொடா்ந்து இயக்க வேண்டும். ரங்கராஜன் மேற்படி கணக்கில் செலுத்திய தொகைக்கு இதுவரையிலான வட்டியையும் வழங்க வேண்டும். ரங்கராஜனுக்குப் பதிலாக அவரது மகளை குழந்தைக்கு பாதுகாவலராக நியமிக்க வேண்டும். மேற்படி கணக்கை நிறுத்தி வைத்து, ரங்கராஜனுக்கு சேவை குறைபாடு ஏற்படுத்தி மன உளைச்சலை உண்டாக்கிய குற்றத்துக்காக அஞ்சல் துறைக்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராதத்தை ரங்கராஜனுக்கு செலுத்த வேண்டும். இந்த வழக்கு செலவு தொகையாக ரூ. 20,000 செலுத்த வேண்டும்” என்று கூறி நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment