தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டார். மாநில தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள சூழலில் அவர் மீது காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கடந்த சில மாதங்களாக அதிருப்தியில் உள்ளனர்.
செல்வப்பெருந்தகையால் புதிய நிர்வாகிகள் நியமனமோ, மாவட்டத் தலைவர்கள் சீரமைப்போ சரியாக செய்ய முடியவில்லை. மூத்த தலைவர்களும் கே.எஸ்.அழகிரிக்கு ஒத்துழைப்பு அளித்தது போல் இவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, வடசென்னை மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம் மற்றும் செங்கம் குமார், டீக்காராமன் உள்பட 32 மாவட்டத் தலைவர்கள் செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். மேலும், காங்கிரஸ் மாநில தலைவராக பதவி வகித்து வரும் செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக முகாமிட்டுள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 25 பேர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கரை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில் கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்களை செல்வப்பெருந்தகை மதிப்பதில்லை. கட்சியை தி.மு.க.வின் ஒரு அணி போல மாற்றி விட்டார். மூத்த தலைவர்கள் சிலரின் ஆதரவாளர்களை பதவியில் இருந்து தூக்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாவட்டத் தலைவர்கள் கே.சி.வேணுகோபால் , பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை சந்தித்து புகார் மனுவை நேரில் வழங்கியுள்ளனர். அடுத்தாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்திக்க உள்ளனர். இன்று மாலை அவரை சந்திக்கும் அவர்கள் நாளை சென்னை வந்து சேரலாம் என்று கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகை பேச்சு
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் அதிருப்தி நிர்வாகிகளின் புகார் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், 'காங்கிரஸ் கமிட்டியை சீரமைக்கும் பணியை செய்கிறோமே தவிர, வேரறுக்கும் பணியை செய்யவில்லை' என்று கூறியுள்ளார்.
மாணிக்கம் தாகூர் கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் காமராஜர் ஆட்சி என்று இல்லை, நல்லாட்சி நடந்தாலே காமராஜர் ஆட்சிதான். காமராஜர் ஆட்சியா? நல்லாட்சியா? என புரிதல் இல்லாமல் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்' என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.