/indian-express-tamil/media/media_files/2025/09/27/sengottaiyan-aiadmk-2025-09-27-15-31-03.jpeg)
அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (செப்டம்பர் 27) மாலை சென்னையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
திருமண நிகழ்வை முடித்துவிட்டு நாளை தனது சட்டமன்றத் தொகுதியான ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்களில் கலந்துகொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அப்போது, அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நீங்கள் முன்னெடுத்த முயற்சிகள் எந்த நிலையில் உள்ளது? அவை நடக்கவில்லையே என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்களே? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மிகச் சுருக்கமாக "பொறுத்து இருக்க வேண்டும். நல்லதே நடக்கும். நீங்கள் தான் ஒன்றிணைப்பு நிலவரம் குறித்து கூற வேண்டும்" என்று கூறினார்.
மேலும், செய்தியாளர்கள் எவ்வளவு நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்? என்று திரும்பத் திரும்பக் கேள்வியெழுப்பியும், செங்கோட்டையன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக, "பொறுத்து இருக்க வேண்டும். நல்லதே நடக்கும்," என்று மீண்டும் கூறிவிட்டு, சென்னை செல்வதற்காக விமான நிலையத்திற்குள் புறப்பட்டுச் சென்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.