/indian-express-tamil/media/media_files/2025/04/23/SB7l86bH6sWwVSSBXrnk.jpg)
சென்னையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தை, செங்கோட்டையன் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு இப்போதே அரசியல் கட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இடம் பிடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்த போது இந்த கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எனினும், அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், மூத்த நிர்வாகி செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதை போன்ற தோற்றம் இருக்கிறது. குறிப்பாக, அத்திக்கடவு அவினாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்ததில் இருந்து, இந்தப் பிரச்சனை உருவானதாக கூறப்படுகிறது.
மேலும், சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வினர் வெளியேறிய போது செங்கோட்டையன் மட்டும் கூட்டத்தொடரில் கலந்து கொண்டது, டெல்லிக்கு சென்று தனியாக மத்திய அமைச்சர்களை சந்தித்தது போன்ற சம்பவங்களும் அரங்கேறின. மேலும், பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விகளையும் செங்கோட்டையன் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து வைத்தார். இந்த விருந்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சூழலில் இன்று நடைபெற்ற விருந்தை அ.தி.மு.க மூத்த நிர்வாகி செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். இச்சம்பவம் அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.