/indian-express-tamil/media/media_files/2025/09/06/sengottaiyan-2025-09-06-12-49-12.jpg)
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு விதித்ததைத் தொடர்ந்து அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்குப் பிறகு, தனது அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து செங்கோட்டையன் தனது சொந்த ஊரான கோபிசெட்டிப்பாளையத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
ஓபிஎஸ், தினகரனைச் சந்தித்ததாக வதந்தி
செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகியோரின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகச் செய்திகள் வந்தன.
இதனிடையே, செங்கோட்டையன் கடந்த முன்தினம் டிடிவி தினகரனைச் சந்தித்துப் பேசியதாகவும், பின்னர் நேற்று ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாயின.
டிடிவி தினகரனைச் சந்தித்ததாக வெளியான தகவலை உடனடியாக செங்கோட்டையன் மறுத்திருந்தார்.
வதந்திகளுக்கு செங்கோட்டையன் விளக்கம்
இந்தச் சூழலில், ஈரோட்டில் இன்று (செப்டம்பர் 26, 2025) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், தன்னைச் சுற்றியுள்ள வதந்திகளுக்கு விரிவான விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:
"என்னைப் பற்றி நான் ஏற்கெனவே விளக்கம் கொடுத்த பிறகும், தொடர்ந்து இதுபோல வதந்தி பரப்புவது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது மனைவி சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், அவரைப் பார்ப்பதற்காகவே நான் சென்னை சென்றேன். அத்துடன், சில சொந்த வேலைகளையும் முடித்துவிட்டு ஈரோடு திரும்பிவிட்டேன்.
நான் யாரையும் சந்திக்கவில்லை! முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை நான் சந்திக்கவில்லை. சென்னையில் நான் அரசியல் ரீதியாக எந்தவொரு சந்திப்பையும் நடத்தவில்லை."
அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சி
தன்னைப் பற்றி திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாகவும், இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சி என்றும் செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.
"எனது ஒரே நோக்கம், அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்; அதனால் அதிமுக வலிமை பெற வேண்டும். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கனவு நனவாக வேண்டும். இந்த அடிப்படையில்தான் செப்டம்பர் 5-ஆம் தேதி நான் அத்தகைய கருத்தைத் தெரிவித்தேன். அதன் பிறகு, நான் வெளிப்படையாக எந்தவொரு கருத்தையும் யாரிடமும் கூறவில்லை. அதிமுக ஒன்றிணைந்து, மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலர வேண்டும்", என்பதே தனது விருப்பம் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.