“இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபட்டவன் நான். என்னை சோதிக்காதீர்கள்.. என்னை வாழவைத்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும்தான்.” என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பிப்ரவரி 9-ம் தேதி கோவை அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவில் விவசாய சங்கங்கள் சார்பில்பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. இது அ.தி.மு.க-வில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடித்தளமாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் மேடையில் இடம்பெறாததால் விழாவில் கலந்து கொள்ளவில்லை என செங்கோட்டையன் தனது அதிருப்தியை தெரிவித்தது அ.தி.மு.க-வில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, ஈரோட்டில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டில் புதன்கிழமை (12.02.2025) ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக தகவல் பரவியது. குறிப்பாக, அவரது வீட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அவருடைய ஆதரவாளர்கள் கூடியிருந்ததால் இது போன்ற தகவல் பரவியது.
இதையடுத்து, தனது வீட்டில் ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். மேலும், “என்னை சந்திக்க தினமும் 100 அல்லது 200 நபர்கள் வருவது வாடிக்கை தான். அதற்காக, ஆலோசனை கூட்டம் நடத்துவதாக கூறுவதா? தனியாக எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தப்படவில்லை” என செங்கோட்டையன் கூறினார்.
இந்நிலையில், ஈரோட்டில் அ.தி.மு.க கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். இயக்கம் ஒன்றாக இருக்க பாடுபட்டவன் நான். என்னை சோதிக்காதீர்கள். என்னை வாழவைத்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும்தான்.” என்று கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது:
“அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் முதலமைச்சர்கள் பெயர் இல்லை என்றுதான் சொன்னேன். அவ்வளவுதான். அ.தி.மு.க ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள். அதுதான் எனது வேண்டுகோள்.
நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை. எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது. கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்.ஜி.ஆர். என்னை வாழவைத்தவர்கள் ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும்தான். அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது” என்று பேசினார்.