/indian-express-tamil/media/media_files/2025/03/29/AHSAyKhmIpS0mSpqidyM.jpg)
KA Sengottaiyan
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டி.டி.வி. தினகரனை சந்தித்ததாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது: "நேற்று நான் சென்னை சென்றது உண்மைதான். ஆனால் அது அரசியல் சார்ந்த பயணமல்ல. என்னுடைய மனைவி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்கவே சென்னை சென்றேன். எனது குடும்பப் பணிகளை முடித்துவிட்டு இன்று ஈரோடு திரும்பி விட்டேன்.
அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை, பேசவில்லை. நான் தினகரனை சந்தித்ததாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை. நேற்று பல்வேறு தொலைக்காட்சி ஊடக நண்பர்களுக்கு என் சென்னை பயணம் குறித்து தெளிவாக விளக்கம் அளித்திருந்தேன்.
என்னைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. வலுப்பெற வேண்டும். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கண்ட கனவு, புரட்சித்தலைவி அம்மா சட்டமன்றத்தில் நூறாண்டு காலம் இயக்கம் நிலைத்து நிற்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த கனவை நிறைவேற்றுவதற்கு, தொண்டர்கள் உட்பட அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும்.
ஒருமித்த கருத்துக்கள் உள்ள நண்பர்கள் என்னிடம் பேசுகிறார்கள். ஆனால் யார் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். எல்லோருடைய மனதிலும் அ.தி.மு.க. ஒன்றாக இணைந்து வெற்றி பெற வேண்டும் என்கிற மனநிலை இருக்கிறது. நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்." இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று சென்னை சென்ற செங்கோட்டையன், அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் அவரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசியதாக தகவல்கள் பரவி இருந்தன. இதனை தற்போது செங்கோட்டையன் மறுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.