மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க வேண்டும் என்று தமிழ நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அப்படி இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைக்க ஒரே நேரத்தில் முயன்றதால் இணையதளம் முடங்கியது.
இந்நிலையில் இது தொடர்பாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று மின் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்: இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பு பின்வருமாறு:
வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் நாளை (நவ. 28) முதல் டிச. 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பண்டிகை நாட்களைத் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், டிச. 31-ம் தேதி வரை ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி மின் கட்டணம் செலுத்தலாம்.
மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதால், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.
அதேபோல, கைத்தறி, விசைத்தறி மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் மற்றும் குடிசை, விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். என்று அவர் கூறியுள்ளார்.