செந்தில் பாலாஜியை எய்ம்ஸ் குழு பரிசோதிக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை விசாரணைக்காக சென்னை அல்லது டெல்லிக்கு கொண்டு அமலாக்கத்துறை கொண்டு செல்கிறதா என்பது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் தெரிய வரும்.
Advertisment
இந்த நிலையில் நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு நுங்கம்பாக்கம் அழைத்து செல்லப்படுவதாக கூறிய நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் சென்னை - ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், அவரது தம்பி மற்றும் உதவியாளரின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்த இடங்களில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த மாதம் தீவிர சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை அடையாறு பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணி அளவில் வந்தனர். அடையாள அட்டைகளை காண்பித்துவிட்டு, வீட்டுக்குள் சென்றனர். பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உடன் வந்திருந்தனர். அப்போது, நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்த அமைச்சரிடம், உதவியாளர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பாதியிலேயே அவர் வீடு திரும்பினார். பின்னர், அவரும் உடன் இருக்க, வீட்டின் ஒவ்வொரு அறையாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதே நேரத்தில், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, அபிராமபுரம் 3-வது தெருவில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, தகவல் அறிந்து வந்த செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள், திமுக நிர்வாகிகள், கட்சியினர் உள்ளிட்டோர் அவரது வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டில் 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை 9 மணி முதல் சோதனை நடத்தி வந்தனர். அங்கு மத்திய பாதுகாப்பு படையின் பெண் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமகிருஷ்ணபுரம் 2-வது குறுக்கு தெருவில் உள்ள செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், ராயனூரில் கொங்கு மெஸ் மணி, அமைச்சரிடம் கணினி இயக்குபவராக பணியாற்றிய சண்முகம்,நேர்முக உதவியாளராக பணியாற்றிய வேலாயுதம்பாளையம் கார்த்தி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது.
ஈரோடு திண்டல் சக்தி நகரை சேர்ந்த டாஸ்மாக் மதுபான ஒப்பந்ததாரர் சச்சிதானத்தின் வீட்டில், கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த 5 அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, அவர் மற்றும் மனைவி, மகளிடம் விசாரணை நடத்தினர்.
அதிமுக ஆட்சியில், 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை தொடக்கத்தில் இருந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையிலும், வருமான வரித் துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனையின் அடிப்படையிலும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததா என்று கண்டறியும் வகையிலும் இந்த சோதனை நடைபெற்றது.
செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி கூறியபோது, ‘‘எந்த நோக்கத்தில் சோதனை செய்கின்றனர் என்று தெரியவில்லை.
வருமான வரித்துறையோ, அமலாக்கத் துறையோ யார் சோதனை நடத்தினாலும் முழு ஒத்துழைப்பு தருவேன், என்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு செந்தில் பாலாஜி சுய நினைவின்றி இருப்பதாகவும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவு சிறப்பித்ததை எடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வரையும் நிலையில், காலை 10 மணி அளவில் செந்தில் பாலாஜியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்திக்க விருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“