/indian-express-tamil/media/media_files/2025/10/01/senthil-balaji-dmk-press-meet-about-tvk-vijay-campaign-karur-stampede-tamil-news-2025-10-01-13-00-04.jpg)
"கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறோம். பாதிக்கப்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம். நான் கரூரைச் சார்ந்தவன், எனது தொகுதி மக்களை எனது சொந்தங்களாக கருதுபவன்" என்று செந்தில் பாலாஜி கூறினார்.
கரூரில் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் விஜய்யைப் பார்க்க மக்கள் கூடியபோது நேரிட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்தச் சம்பவத்தில் ஆளும் தி.மு.க-வினர் மின்சாரத்தைத் துண்டித்து கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதாக த.வெ.க-வினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி இந்த விவகாரம் குறித்து விடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “கரூரில் விஜய் பிரசாரத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் அரசியலாக்க வேண்டாம். கரூர் துயர சம்பவம் மிக கொடுமையானது, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பவம் நடந்த உடனே முதல்வர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார். கரூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி.
கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறோம். பாதிக்கப்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம். நான் கரூரைச் சார்ந்தவன், எனது தொகுதி மக்களை எனது சொந்தங்களாக கருதுபவன், அவர்களின் ஒவ்வொரு நல்லது கெட்டதிலும் நான் நிற்கின்றேன். ஆகையாலவே இந்த துயர சம்பவத்தில் முதல் ஆளாகச் சென்று உதவிகளை செய்து இருக்கின்றேன். அனைத்து கட்சியினர் வேறுபாடு இன்றி உதவி செய்தனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் கொடுமையானது, பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி எக்காரணம் கொண்டும் இதுபோன்ற சம்பவம் எந்த ஊரிலும் நடந்துவிட கூடாது. த.வெ.க கூட்டத்தில் எங்கேயாவது தண்ணீர் பாட்டில் இருந்ததா? ஒரு பிஸ்கட் பாக்கெட்களாவது இருந்ததா? அந்த இடத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செருப்புகள் தான் மிஞ்சியது, காலையில் இருந்து அவர்கள் நிற்கும் போது நீங்களே சொல்லுங்கள். குறித்த நேரத்தில் வந்திருந்தால் இந்த பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. காவல்துறையினர் கூறிய எந்த அறிவுரையையும் தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்கவில்லை.
இந்த துயர சம்பவத்தின் போது நான் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் உடன் இருந்ததால் சம்பவம் கேள்விப்பட்ட உடனேயே நான் அமராவதி மருத்துவமனைக்கு விரைந்தேன். அதேபோல் 8:10 மணிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிற கட்சியினர் விரைந்ததையும் நீங்கள் அறிவீர்கள். விஜய் கூட்டத்திற்கு அரசு செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்திருந்தது. விஜய் கூட்டத்திற்கு வந்தவர்கள் கட்டுக்கடங்காதவர்கள் அல்ல கட்டுப்பாடற்றவர்கள். ஒரு தவறு நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் ஓடி ஒளியக் கூடாது.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் என் விஜய் விமர்சித்தது ஏற்புடையதல்ல. அந்த சம்பவங்கள் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற சம்பவம். அதற்கு எடப்பாடி பழனிச்சாமியை பொறுப்பேற்க வேண்டும். அந்த பத்து ரூபாய் கூடுதல் தொகை எடப்பாடிக்கு தான் சென்றது என்பதை அவர் ஒத்துக் கொள்ள வேண்டும். இன்று முதல் எடப்பாடி பழனிச்சாமி பத்து ரூபாய் பழனிச்சாமி என அழைக்கப்படலாம். எனக்கு யாரும் சான்றிதழ் கொடுக்க வேண்டாம். பாட்டிலுக்கு பத்து ரூபாய் பிரச்சனை விஜய்க்கு என்னவென்று தெரியுமா? இ.டி எடுத்துள்ள வழக்கில் 34 வழக்குகள் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் என் மீது போடப்பட்டது. தி.மு.க ஆட்சியில் ஏழு வழக்குகள் தான் என் மீது பதியப்பட்டுள்ளது." என்று அவர் கூறியுள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.