மீண்டும் புழலில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி: செப்டம்பர் 15 வரை காவல் நீட்டிப்பு
அடுத்த காவல் நீட்டிப்புக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை எனவும், காணொலி வாயிலாக ஆஜாரனால் போதுமானது எனவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
அடுத்த காவல் நீட்டிப்புக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை எனவும், காணொலி வாயிலாக ஆஜாரனால் போதுமானது எனவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
Advertisment
அதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. அதன்படி, அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தினர். இந்த 5 நாட்களில் அவரிடம் சுமார் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக கூறப்பட்டது. அவரின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 25ம் தேதியுடன், செந்தில்பாலாஜிக்கு சிறைக்காவல் முடிவடைந்த நிலையில், அவர் தொடர்பான வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை, அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறையிலிருந்து வீடியோ காணொலிகாட்சி மூலம் எல்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நிதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை, 28ம் தேதி வரை அதாவது இன்றைய தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
Advertisment
Advertisements
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. அவர் எல்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதனை கேட்ட நீதிபதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
மேலும் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த காவல் நீட்டிப்புக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை எனவும், காணொலி வாயிலாக ஆஜாரனால் போதுமானது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“