சென்னையின் முக்கிய பகுதியான சேப்பாக்கத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற விழா இன்று நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, அருகிலிருந்த குடிசைப் பகுதிகள் தற்காலிக திரைகளால் மறைக்கப்பட்ட நிகழ்வு, பொதுமக்களிடையே பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
லாக் நகர் பகுதியில் பல்நோக்கு கட்டட திறப்பு விழா இன்று (23-06-25) நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியின்போது அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி பக்கிங்காம் கால்வாய் பகுதி மற்றும் சாலையோரத்தில் உள்ள குடிசை குடியிருப்பு பகுதி என இருபுறமும் சுமார் 200 மீ. தூரம் வரை திரைச்சீலை போட்டு மறைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டதா? அல்லது கட்சி சார்பில் செய்யப்பட்டதாக என்பது தெளிவாக தெரியவில்லை. லாக் நகர் அருகே ஒரு புறம் பக்கிங்காம் கால்வாயும், மறுபுறம் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குடிசைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செயல்கள், அரசின் மக்கள்நலன் சார்ந்த உண்மையான அக்கறை மற்றும் வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.