தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.,யாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல் துறையின் புதிய தலைவராகவும், சட்டம் - ஒழுங்கு டிஜிபியாகவும் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல் துறையின் தலைவராக இருக்கும் டி.ஜி.பி சி.சைலேந்திரபாபு வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) பணி ஓய்வு பெறுகிறார். ஏற்கனவே, ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு பெற்று, தற்போது அவர் பணி நிறைவு செய்கிறார். இதையடுத்து, புதிய சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
இதையும் படியுங்கள்: இந்தியாவில் முதல்முறையாக… சென்னையில் ட்ரோன் சிறப்பு காவல் பிரிவு தொடக்கம்
இந்நிலையில், புதிய டி.ஜி.பி.,க்கான பட்டியலை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 22 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதிப் பட்டியலில் சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இந்த 3 பேரில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்ய வேண்டும்.
இதன்படி, தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.,யாக சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சங்கர் ஜிவால் தமிழக காவல் துறையின் புதிய தலைவராகவும், சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1990-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான சங்கர் ஜிவால், முதுநிலை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். சங்கர் ஜிவால் இன்ஜினீயரிங் படித்து முடித்ததும் செயில் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா), பெல் (பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்) நிறுவனங்களில் சிறிது காலம் பொறியாளராக பணியாற்றினார். பின்னர் யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று தமிழக பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார்.
மன்னார்குடியில் காவல் உதவி ஆணையராக பணியை தொடங்கிய சங்கர் ஜிவால், சேலம், மதுரை மாவட்ட எஸ்.பி., மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர், திருச்சி காவல் ஆணையர், உளவுப் பிரிவு டி.ஐ.ஜி., ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார். அயல்பணியாக மத்திய அரசில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த சங்கர் ஜிவால், தமிழகம் வந்து அதிரடிப்படை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். சங்கர் ஜிவால் சிறந்த பணிக்காக 2 முறை குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்றுள்ளார். சென்னையின் 108வது காவல் ஆணையராக பதவி வகித்து வந்த சங்கர் ஜிவால் தற்போது தமிழக டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil