நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் அடையாறு பகுதியிலுள்ள ஜானகி எம்.ஜி.ஆர் கலைக்கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ளது. மணி மண்டபத்தை அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைப்பார்கள் என அரசு தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சிவாஜி ரசிகர் மன்றம், சிவாஜியின் மகன் பிரபு மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் முதல்வரே கலந்து கொண்டு சிவாஜி மணி மண்டபத்தை திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘நடிகர் திலகம் சிவாஜியின் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.