மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் காவல்துறை இறுதி மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 19 மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர் திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம். சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது 3 முறையும் பல்வேறு மாநிலங்களின் விருதுகளையும் பெற்றவர்.
அண்மையில், பாடகி வாணி ஜெயராம்க்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அவர் அந்த விருதை வாங்குவதற்கு முன்னதாகவே, உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், படுக்கையில் இருந்து விழுந்து காலமானார். கானசரஸ்வதி என்று ரசிகர்களால் போற்றப்பட்ட வாணி ஜெயராமின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இசைத் துறையினர், திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
வாணி ஜெயராமின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், இன்று (பிப்ரவரி 5) மதியம் அவருடைய உடல் அமரர் ஊர்தி மூலம் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.
பெசன்ட் நகர் மின் மாயானத்தில், பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு 10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை இறுமரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், அவருடைய உடலுக்கு குடும்ப வழக்கப்படி ஆரிய சமாஜ முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. பின்னர், வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்கில், வாணி ஜெயராமின் உறவினர்கள், நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன், அவருடைய மகள் மதுவந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“