ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் இனி பள்ளிகளுக்குள்ளும், பள்ளிகளுக்கு வெளியிலும் பயன்படுத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் ஏற்கனவே வீட்டில் வைத்திருக்கும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய உதவுவதற்காக, அந்தந்த பள்ளிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மறுசுழற்சி பிரிவுக்கு அனுப்பம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்:
மத்திய அரசின் ஸ்வச்சட்டா ஹாய் சேவா (தூய்மை என்பது சேவை) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி நடைமுறைப் படுத்தப்படுகிறது. பிரச்சாரத்திற்கான இந்த ஆண்டு தீம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை.
இந்த பிரச்சாரம் புதன்கிழமை(செப்.11) தொடங்கி காந்தி ஜெயந்தி (அக்டோபர்- 2) வரை இயங்கும். மேலும், இந்த நாட்களில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை அக்டோபர் 3 முதல் 27 வரைக்குள் மறுசுழற்சி செய்யதிருக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளிடம் பிளாஸ்டிக் மேலாண்மை தொடர்பான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி நடத்தி பரிசுகள் அறிவிக்கப்படும் என்றும் அந்த அரசாணையில் உள்ளது.
தமிழக முதல்வர் அவர்களால் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, அதை தொடர்ந்து அரசாணை எண்.84 ன் படி 01.01.2019 - ஆம் நாளில் இருந்து ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.