/indian-express-tamil/media/media_files/2025/09/18/sirgahi-2025-09-18-14-07-35.jpg)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டப்பட்ட கர்ப்பிணிகளுக்குத் திடீர் உடல் நல கோளாறு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து சீர்காழி பகுதிகளில் பெண்களுக்கு மருந்து விநியோகங்கள் செய்ய தடை விதித்து சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள அரசு மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகள் உள்ளிட்ட 36 பேருக்கு, ஊசி போட்ட பிறகு திடீரென உடல்நடுக்கமும், கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அச்சமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். உடனடியாக மாற்று மருந்துகள் கொடுக்கப்பட்ட பிறகு பெரும்பாலானோர் உடல்நிலை சீரடைந்தது.
மேல் சிகிச்சைக்காக இரண்டு பேர் மட்டும் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து சீர்காழி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சீர்காழி தாலுக்காவை சேர்ந்த ஏராளமான மக்கள் நாள்தோறும் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/18/mayiladuthurai-pregnant-1-2025-09-18-14-09-29.jpg)
இந்நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள தாய்சேய் நல மையத்தில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்காகவும், மகப்பேறு சிகிச்சைக்காகவும் வந்து செல்கின்றனர். வழக்கம் போல, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 36 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அண்மையில் குழந்தை பெற்ற சில பெண்களுக்கு, மருத்துவர்கள் மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியுள்ளனர்.
ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே, பலருக்கு திடீரென உடல்நடுக்கம் தொடங்கி, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு இந்த நிலை ஏற்பட்டதால், அங்கிருந்த செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவப் பிரிவின் பொறுப்பு மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/18/mayiladuthurai-pregnant-2025-09-18-14-09-29.jpg)
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தலைமை மருத்துவர் அருண்ராஜ் குமாரிடம் தொடர்பு கொண்ட போது, அவர், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 27 கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு ஊசி செலுத்தப்பட்ட பிறகு, திடீரென உடல்நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது உண்மைதான். உடனடியாக, அந்த மருந்தின் மாதிரிகள் மற்றும் ஊசி செலுத்தப்பட்ட முறைகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளோம்.
அத்துடன், நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக மாற்று மருந்துகளை அவர்களுக்குச் செலுத்தினோம்," அதனை தொடர்ந்து அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். மேலும் இது குறித்து ஆய்வு செய்த பின்னர் முழு விபரம் தெரியவரும் என தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த சீர்காழி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம், எந்த நிறுவனத்தின் மருந்து பயன்படுத்தப்பட்டது, அந்த மருந்தின் காலாவதி தேதி, ஊசி செலுத்தப்பட்ட விதம், மற்றும் இது போன்ற நிகழ்வுகள் முன்பு எப்போதாவது நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஊசி செலுத்தப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, சீர்காழி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமான மருந்துகளை சீர்காழி பகுதியில் மருந்து கடைகளில் விநியோகிக்க கூடாது என சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us