சிவகங்கையில் 100 வருடம் நீடிக்கும் அவலம்... குறிப்பிட்ட சமூக மக்கள் சுடுகாட்டுக்கு செல்ல சாலை இல்லாமல் கடும் வேதனை

சிவகங்கை மாவட்டம் சின்னகண்ணூர் கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் இறந்த தங்கள் சொந்தங்களின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல சாலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் சின்னகண்ணூர் கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தில் மட்டும் இறந்த தங்கள் சொந்தங்களின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல சாலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Sivaganga Chinakanur Caste Discrimination Tamil News

நூறு வருடங்காளாக இதே அவல நிலை நீடிப்பதாகவும், இனி யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது எனவும் சின்னகண்ணூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சின்னகண்ணனூர் கிராமத்தில் சுமார் 30 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் இக்கிராமத்தைச் சேர்ந்த வேலு, குடும்ப பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த அவர், சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யும்போது பெரும் சிரமம் ஏற்பட்டது.

Advertisment

கிராமத்தில் பொதுச்சுடுகாடு இருந்தாலும், அருந்ததியர் சமூகத்தவரை அங்கு அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை. இவர்களுக்கென தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்த இடத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. வேலுவின் மரண நாளில் பெய்த மழையால் வயல்வெளிகள் சகதியால் நிரம்பியதால், உடலை மிகுந்த கஷ்டத்துடன் கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதே நிலைதான் அருந்ததி இன மக்கள் வீட்டில் யார் இறந்தாலும் கடந்த நூறு வருடங்களாக நடந்து வருகிறது

இதுகுறித்து வேலுவின் மனைவி ஹேமா கண்ணீர் மல்க பேசுகையில், "என் கணவர் இறந்தது ஒரு துயரம், ஆனால் அவரை அடக்கம் செய்யவும் இவ்வளவு கஷ்டம் பட்டோம். இனி எவரும் இப்படிப் பட்ட அவலத்தில் சிக்கக் கூடாது. சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனம் உருகக் கோரிக்கை விடுத்தார்.

கிராம மக்கள் கண்ணீர் மல்க பேட்டியளிக்கையில், “நாங்கள் உடலை எடுத்துச் செல்லும் போதும், மத்த சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளிலும் எங்களால் செல்ல முடியவில்லை. எங்கள் சமூகத்துக்கு நூறு ஆண்டுகளாக இதே துயரம் நீடிக்கிறது. விவசாய நேரங்களில் விளைந்த நெல் வயலுக்குள் சடலத்தை தூக்கி செல்கின்ற அவல நிலையும் அடிக்கடி நடக்கின்றது இனிவரும் மழைக்காலங்களில் யாரேனும் இறந்தால் மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாக நேரிடும். எத்தனை முறை மனு கொடுத்தும் எவரும் கவனிக்கவில்லை” என்று வருத்தம் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

இது குறித்து அரசு தரப்பில் மானாமதுரை வருவாய் ஆய்வாளர் விளக்கமளிகையில், "சுடுகாட்டிற்கு சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். நிலங்கள் தனியார் பட்டா பகுதிகளாக இருப்பதால் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. விரைவில் தீர்வு காணப்படும். மேலும், பொதுச்சுடுகாட்டிலும் இவர்களை அடக்கம் செய்ய வழிவகுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.

Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: