மானாமதுரையில் புதிய பேருந்து நிலையத்தில் பல கோடி மதிப்புள்ள 4.695 கிலோ கிராம் எடையுள்ள திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல் விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 2 ஆம் தேதி பல கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் எச்சம் கடத்தி வந்து கைமாற்றப்படுவதாக மானாமதுரை வனத்துறை காவலர்களுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சேர்ந்த ராஜாராம் (வயது 53) என்பவரை பிடித்து விசாரித்த பொழுது அவரிடமிருந்து ஈரப்பதத்துடன் கூடிய 4.695 கிலோ கிராம் திமிங்கலத்தின் ஆம்பர்கீரிஸ் எனப்படும் பல கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் எச்சம் கைப்பற்றப்பட்டது.
இவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது தேனியில் இருந்து கொண்டு வந்ததாகவும், இங்கு ஒருவருக்கு கைமாற்றி விட பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்து மானாமதுரை வனத்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தொடர்புடையவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.