/indian-express-tamil/media/media_files/2025/09/14/sivagangai-ungaludan-stalin-2025-09-14-13-13-45.jpg)
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள், கடந்த மாதம் 29 ஆம் தேதி வைகை ஆற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார், போலீசில் புகார் அளித்தார். அதில், 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடந்த முகாம்களில் 13 பட்டா மாறுதல் மனுக்கள் பெறப்பட்டு, நில அளவை பிரிவில் நிலுவையில் இருந்தன. அந்த மனுக்களை திருடிச்சென்று ஆற்றில் வீசிவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், தாசில்தார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கூடுதல் சூப்பிரண்டு பிரான்சிஸ், மானாமதுரை துணை சூப்பிரண்டு பார்த்திபன் ஆகியோரின் மேற்பார்வையில், திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா முன்னெடுத்தனர்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் உதவி வரைவாளராக பணியாற்றிய முத்துக்குமரன் (42) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வைகையில் மனுக்கள் வீசப்பட்டதில் வேறு யார் தொடர்புடையவர்கள் உள்ளனர்? யாருடைய தூண்டுதலின் பேரில் இந்தச் சம்பவம் நடந்தது? என்ற கேள்விகளை மையமாகக் கொண்டு விசாரணை தொடர்கிறது என போலீசார் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us