சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப் பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், 6 காவல்துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேஷ் நீதி விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முழுமையான விசாரணை நடத்தி, வரும் 8-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி ஜான்சுந்தர்லால் இன்று இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விசாரணை முடிந்து, வரும் 8-ஆம் தேதி நீதிபதி ஜான்சுந்தர்லால் விரிவான அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பின்னரே, இந்த வழக்கு சி.பி.ஐ வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.
ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில், இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோவில் பணியாளர் சக்தீஸ்வரன் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ரவுடிகள் தனக்கு மிரட்டல் விடுவதாகவும், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக டி.ஜி.பி-க்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்தார்.
/indian-express-tamil/media/post_attachments/0949a15b-5e7.jpg)
சக்தீஸ்வரன் காவலர்களால் அஜித் தாக்கப்படும் வீடியோவை எடுத்த முக்கியமான ஆவணத்தை அவர் சமர்ப்பித்துள்ளார். இதனால், அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கியுடன் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.