சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி-யாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அஜித்குமார் காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது மருத்துவ அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை 4-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இன்று நீதிபதி திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நேரில் வருகை தந்து, காவல் ஆய்வாளர் மற்றும் ஏ.டி.எஸ்.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் விசாரணை செய்தார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம் இன்று நேரில் ஆஜராகினார்.
இதனிடையே, நேற்று (ஜூலை 4) நடைபெற்ற விசாரணையில் திருப்புவனம் அரசு மருத்துவமனையின் மருத்துவர் கார்த்திகேயன் முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார். அதில் அவர் தான் அஜித்குமாரை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தார் என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக மருத்துவர் கார்த்திகேயன் பேசுகையில், “ஜூன் 28 மாலை 6.30 மணியளவில் போலீஸாரால் அழைத்து வரப்பட்ட அஜித்குமாரை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து இருந்தார் என உறுதி செய்தேன். உடலை பிரேதப் பரிசோதனைக்காக வைக்கச் சொன்னேன். எனினும், மேலதிகாரிகள் கூறியதன்படி, போலீஸார் உடலை அவசரமாக எடுத்துச் சென்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.