சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி-யாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதேபோல், மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அஜித்குமார் காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது மருத்துவ அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் ஐந்தாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்புவனம் மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர் நவீன் குமார் உள்ளிட்ட நான்கு பேரை அழைத்து சென்று தாக்கிய இடங்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதேபோல், திருப்புவனம் காவல்நிலையம் மற்றும் உயிரிழந்த அஜித் குமார் வீடு உள்ளிட்ட பகுதிகளிலும் சி.பி.ஐ அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், உயிரிழந்த அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை வாகனத்தில் போலி நம்பர் பிளேட் இருந்தது சி.பி.ஐ விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதாவது, போலீஸ் வாகன பதிவெண் பற்றி சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், ஒரே வாகனம் இரண்டு பதிவெண்களில் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இன்று சனிக்கிழமை மாலை கோவில் செயல் அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட போலீசார் பயன்படுத்திய டெம்போ வேனை சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்து ஓட்டுநர் ராமச்சந்திரனிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த போலீஸ் வாகனத்தில் TN 01 G 0491 என்ற பதிவெண்ணிற்கு பதில் TN 63 G 0491 என்ற பதிவெண் கொண்ட ஸ்டிக்கர் பயன்படுத்தியுள்ளனர்.
சென்னை மற்றும் சிவகங்கை என இரண்டு மாவட்ட பதிவெண் களுடன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் டெம்போவின் உள்ளே தடயங்களை சேகரிக்கும் போது மதுபானம், சீட்டு விளையாட்டு கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் போலீஸ் வாகனத்தில் இருந்தது சி.பி.ஐ அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொலையை செய்து விட்டு குற்றத்தை மறைக்க அனைத்து சட்டவிரோத செயல்களில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளது சி.பி.ஐ அதிகாரிகளை மட்டுமில்லாமல், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.