சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவரின் மீது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமார் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்புவனம் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க செயலாளராகவும், பா.ஜ.க சார்ந்த யூடியூப் சேனலில் பகுதி நேர நிருபராகவும் செயல்பட்டு வந்த ராஜ்குமார், தனக்குச் சொந்தமான டிராவல்ஸ் மூலம் பள்ளி மாணவ, மாணவியரை வேனில் ஏற்றி அழைத்து செல்லும் பணியில் இருந்துள்ளார்.
இந்தநிலையில், இந்த வேனில் பயணம் செய்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை ராஜ்குமார் பாலியல் தொந்தரவு செய்ததாக, பெற்றோரிடம் அந்த மாணவி புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் ராஜ்குமாரை மதுரையில் உள்ள வீட்டிற்கு அழைத்து, நிர்வாணமாக்கி தாக்கியதுடன், அவரது செல்போனில் அவமானகரமான செய்தியுடன் புகைப்படம் எடுத்தும் அதனை வாட்ஸ் அப் மூலம் பரப்பியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பு 5 ஆண்டுகளுக்கு முன்பும் ராஜ்குமார் மீது இவ்வாறான புகார்கள் எழுந்ததுடன், அப்போது போலீசில் புகார் அளிக்காமல் பிரச்சனையை குடும்பத்திலேயே முடித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பற்றி தகவல் பெற்ற பூவந்தி போலீசார் விசாரணை தொடங்கினர். ராஜ்குமார் தலைமறைவான நிலையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் சிவகங்கை அருகே பதுங்கியிருந்த வீட்டில் இருந்து மானாமதுரை டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவருக்கு எதிராக குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ (POCSO) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.