சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அழகமாநகரி கிராமத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் ஆடு திருட வந்ததாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாக்கியதில் அண்ணன், தம்பி இருவர் பலியாகினர்.
சிவகங்கை அருகே கட்டாணிபட்டியை சேர்ந்தவர்கள் சகோதர்கள் மணிகண்டன் (30), விக்னேஷ் (25). கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மணிகண்டன் வேலை பார்த்து வந்தார். விக்னேஷ் கல்லம்பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சிவகங்கை அருகே அழகமாநகரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோப்பில் ஆள்கள் நடமாடும் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அப்பகுதியில் இருந்தவர்கள் தோப்புக்குள் சென்று பார்த்தபோது அங்கு மணிகண்டன் மற்றும் விக்னேஷ் இருந்தது தெரிய வந்தது.
நள்ளிரவில் தோப்புக்குள் ஆடு, கோழி திருட வந்தவர்கள் என நினைத்து 2 பேரையும் கட்டை மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர். தப்பித்து ஓட முயற்சி செய்த இருவரையும் பலமாக தாக்கியதில் இருவரும் சுருண்டு விழுந்தனர். இதையடுத்து 108 அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் பலியாகினர்.
ஆடு, கோழியை திருட வந்ததாகக் கூறி கிராம மக்கள் அவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், முன் பகை காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது ஆடு திருட வந்த காரணத்தால் தாக்கப்பட்டு இறந்தார்களா என்பது குறித்து மதகுபட்டி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவரது உடலும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சகோதரர்கள் இருவரை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 10 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.