சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை மருந்துக் கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வெடி விபத்தில் ஒரு ஆண் தொழிலாளர் மற்றும் இரண்டு பெண் தொழிலாளர்கள் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் படுகாயமடைந்த மூன்று பேர் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.