திருச்சி மாரிஸ் தியேட்டர் பகுதியில் அமைந்துள்ள இரயில்வே மேம்பாலத்துடன் கூடிய சாலைரோடு திருச்சியின் மிக முக்கிய சாலைகளில் ஒன்று. இந்த சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாலம். இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர் மழையால் பாதிக்கப்பட்டது.
இதனால் இதை முழுவதிலும் அகற்றி புதிய மேம்பாலம் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் துவங்கின. ஆனால் இன்னும் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் விரைவில் முடிக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் கிஷோக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, திராவிட முன்னேற்ற கழக அரசு பொறுப்பேற்றது முதல் திருச்சிக்கு பயன்தரும் பல்வேறு நல திட்டங்களான காவிரி மேம்பாலத்தை ரூபாய் ஆறு கோடி மதிப்பீட்டில் சீரமைத்தது, அதனருகே தற்பொழுது புது மேம்பாலம், தற்பொழுது ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என அடுக்கடுக்கான திட்டங்களை கொண்டு வந்தது உள்ளபடியே பாராட்டுக்குறியது.
அந்த வகையில் திருச்சிக்கு வரும் தமிழக முதல்வரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில் வருக வருக என வரவேற்கிறோம். மேலும், திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளை இணைக்கும் திருச்சி மக்கள் பெரிதும் பயன்படுத்தும் கோட்டை மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் பணிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இதனால் திருச்சி பொதுமக்கள் சொல்லொனா துயரதிற்கு ஆளாகுவதோடு, போக்குவரத்து நெரிசலால் திருச்சியே சில நேரங்களில் ஸ்தம்பிக்கிறது. எனவே, திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறக்க வரும் தமிழக முதல்வர் அவர்கள் மேற்படி மாரிஸ் தியேட்டர் மேம்பால பணிகளை நேரில் ஆய்வு செய்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
மேற்கண்டவாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்