smriti irani speech in madurai on pro-caa rally - மதுரையில் ஒலித்த ஸ்மிருதி இரானி குரல் - திமுகவுக்கு சரமாரி கேள்வி
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக மதுரையில் பாஜக இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியது. இதில் மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார்.
Advertisment
பாஜக மாநில துணைத் தலைவர் சுப.நாகராஜன் தலைமை வகித்தார். மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சசிராமன் வரவேற்றார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய இரானி, "திமுகவிடம் பல்வேறு கேள்விகளை கேட்க விரும்புகிறேன். நாட்டின் எல்லையை பாதுகாப்பவர்கள் மீது களங்கம் ஏற்படுத்துபவர்கள், ராணுவ வீரர்களை தாக்குபவர்களுக்கு ஆதரவாக திமுக பேசுவது ஏன்?
இலங்கை தமிழர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் திமுக செயல்படவில்லை. இந்துக்களை திமுகவுக்கு பிடிக்காது. சீக்கியர்களை காங்கிரஸாருக்குப் பிடிக்காது. ஆனால் மத்திய அரசு அகதிகளாக வரும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த திருவள்ளுவர் மண்ணில் இருந்து நான் கேட்பது, பாகிஸ்தானை ஏன் திமுக ஆதரிக்க வேண்டும்? தேசத்தை துண்டாட நினைக்கும் காங்கிரசுக்கு திமுக ஏன் ஆதரவாக இருக்கிறது?
கடந்த 2007-ல் மத்திய அரசில் திமுக இருந்தது. அப்போது இலங்கை தமிழர்களை தமிழகத்தில் குடியமர்த்தக்கூடாது என காங்கிரஸ் அரசு அரசாணை வெளியிட்டது. அப்போது அதை திமுக எதிர்க்காதது ஏன்? இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்தது ஏன்?
இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட இந்தியாவில் குடியுரிமை வழங்குவதை தடை செய்யும் சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தபோது திமுக ஆதரித்தது ஏன்?
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பாகிஸ்தான் போரில் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவும், அவர்களை ராஜஸ்தான், குஜராத்தில் குடியேற்றவும் சட்டம் கொண்டு வந்த போது திமுக ஆதரித்தது. அப்போது இந்துக்களை ஆதரித்த திமுக, இப்போது எதிர்ப்பது ஏன்?
பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மீது திமுகவுக்கு அன்பு இல்லையா என கேட்க விரும்புகிறேன்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்திய நலனுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பல்வேறு அறிக்கைகளை அளித்து வருகிறார். ராகுலை பின்பற்றி திமுக ஏன் பாகிஸ்தானை ஆதரிக்க வேண்டும்?
ராஜஸ்தான் மாநில தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெற்றிப்பெற்றால் குடியுரிமை சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியது. அதை தான் பாஜக செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் எதிர்க்கிறது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை திமுக கண்டிக்காதது ஏன்? இப்போது எதிர்ப்பது ஏன்? இதற்கு திமுக பதிலளிக்க வேண்டும்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்றி இருக்கிறது மத்திய அரசு. கடந்த கால வரலாற்று பிழைகளை மத்திய அரசு சரி செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை" என்று ஸ்ம்ரிதி ஸ்மிருதி இரானி பேசினார்.
பொதுக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், மாநில செயலர் ஸ்ரீனிவாசன், மாநில மகளிரணி தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, மகா சுசீந்திரன் உள்ளிட்டோரும் பேசினார்கள்.