சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
"7வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்"
இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-ஆவது முறையும் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் என்றால் 'உழைப்பு உழைப்பு உழைப்பு' என கலைஞர் கூறுவார். ஆனால், கலைஞர் இன்றிருந்தால் ஸ்டாலின் என்றால் 'சாதனை சாதனை சாதனை' என கூறியிருப்பார். கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன் என்றார்.
தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வருமை கோட்டிற்கு கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வருமைன்கோட்டிற்கு கீழ் உள்ளனர். 98.3% பள்ளிகளில் ஆய்வக வசதிகள் உள்ளது.கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை.மிகச்சிறந்த 100 பல்கலை. பட்டியலில் 25 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில்தான் காவல்துறையில் பெண் அதிகாரிகள் எண்ணிக்கை அதிகம். பல்வேறு துறைகளில் இறுதி இடத்தில் இருந்த தமிழ்நாடு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
"9.6% வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு"
இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் மத்திய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைந்துள்ளது. கடந்த அரசின் நிர்வாக சீர்கேட்டால் கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது தமிழ்நாடு. கடந்த ஆட்சியின் இருளை போக்கி தலைநிமிர்ந்து நடக்கிறது தமிழ்நாடு அரசு. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி இந்தியாவில் எந்த மாநிலமும் காணாதது தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.3.58 லட்சம்; தேசிய சராசரி ரூ.2.06 லட்சம்தான். காற்றாலை உற்பத்தியில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. 27.75 லட்சம் பேர் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். ரூ.5.35 லட்சம் முதலீடுகள் பெற்று இந்தியளவில் தமிழ்நாடு 2-ம் இடம். நாட்டிலே அதிக அரசு மருத்துவர்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக மருத்துவ படிப்பு இடங்களில் தமிழ்நாட்டில்தான் உள்ளன.
”காலனி என்ற சொல் நீக்கப்படும்”
தமிழ்நாடு அமைதியான மாநிலம். தமிழ்நாட்டில் அமைதி நிலவ காவல்துறைதான் காரணம். அமைதியான மாநிலத்தில்தான் தொழில் வளரும். காவல்துறைக்கு நன்றி. குற்ற சம்பவங்களில் தமிழ்நாடு பூஜ்ஜியமாக இருக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி இருப்பது உறுதிசெய்யப்படும். இனி ஆண்டுதோறும் செப். 6 காவலர் நாளாக கொண்டாடப்படும். காவலர் நாளில் சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். காலனி என்ற சொல் அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும். ஆதிக்கம் மற்றும் தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் நீக்கப்படும்.
உள்துறை சார்பில் 102 அறிவிப்புகள்
உள்துறை சார்பில் 102 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்.
*சென்னை ஆயுதப்படையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.
*உதகையில் ஆயுதப்படை குடியிருப்புகள் கட்டப்படும்.
*250 காவல் ஆய்வாளர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.
*350 நான்கு சக்கர வாகனங்கள் வாங்கப்படும்
* உதகை, தருமபுரியில் ரூ.101 கோடியில் ஆயுப்படை காவல் குடியிருப்பு கட்டப்படும்.
*50 நடமாடும் தடயவியல் வாகனம் வழங்கப்படும்.
*ரூ.16 கோடியில் 7 இடங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்து 102 அறிவிப்புகளை வெளியிட்டார்.
”2026-ல் திராவிட மாடல் அரசு 2.0”
2026ல் திராவிட மாடல் அரசு 2.0 வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பார்ட் ஒன் தான்; தமிழ்நாட்டுக்காக, தமிழர்களுக்காக எனது பயணம் தொடரும். திட்டங்கள் எல்லாம் ஸ்டாலின் பெயரை அல்ல திராவிட மாடல் பெயரை கூறும். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை விட 1000 மடங்கு சிறப்பான சாதனைகளை செய்துள்ளோம். தமிழ்நாட்டை ஒருபோதும் சூறையாட முடியாது என்று கூறினார்.
மேலே பாம்பு.. கீழே நரிகள்.. குதித்தால் அகழி.. ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் மத்திய அரசு மறுபக்கம் ஆளுநர்.. நிதி என்று எல்லா தடைகளைத் தாண்டி செய்த சாதனை படைத்து வருகிறோம். இது தனிமனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் எனக் கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.