/indian-express-tamil/media/media_files/2025/01/22/29wx14UFhi0Klo036CxN.jpg)
கல்குவாரி தொடர்பாக புகார் அளித்த நபர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் ஆய்வு பணி மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமயம் அருகே பிரச்சனைக்குரிய கல் குவாரிகளில் கனிம வளத்துறை அதிகாரிகள் ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜகுபர் அலி என்பவர் அப்பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வரும் கல் குவாரி உரிமையாளர்களால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 5 பேரில் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜகுபர் அலி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்ட ராசு, ராமையா ஆகியோருக்கு சொந்தமான கல்குவாரிகளில் திருச்சி, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிம மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை ஆய்வு மேற்கொள்ள வந்தனர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாததால் இன்று காலை முதல் ட்ரோன் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வானது அடுத்த மூன்று நாட்களுக்கு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆய்வுக்குப் பின்னரே முழு விவரம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே கல்குவாரி தொடர்பாக புகார் அளித்த நபர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல் குவாரிகளில் ஆய்வு பணி மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யார் இந்த ஜெகபர் அலி?
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகபர் அலி (58). இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும், அதிமுக ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளராகவும் இருந்து வந்தார்.
இவர் திருமயம், வெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், கல் குவாரிகள், சாலை பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்துள்ளதுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (17.01.2025) தொழுகை முடித்து கொண்டு அவரது கிராமமான வெங்களூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலையின் பின்னணி: இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியது: ராசு, ராமையா ஆகியோர் சேர்ந்து துளையானூர் பகுதியில் கல்குவாரி தொழில் செய்து வந்தனர். இவர்கள் சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பதாக வருவாய்த்துறை, கனிம வளத்துறை அலுவலர்களுக்கு ஜகபர் அலி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடர்ந்தார். மேலும், கடந்த வாரம் கூட வருவாய்த் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தங்களது தொழிலுக்கு இடையூறாக இருந்ததால், குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, தினேஷ்குமார் மற்றும் முருகானந்தம், காசிநாதன் ஆகியோர் ஜகபர் அலியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் வவ்வாணி கண்மாய் அருகே சென்றபோது முருகானந்தம் தனது லாரி மூலம் இடித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.