கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுகவில் விருப்பமனு அளித்த மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் 2019 அழகி பட்டம் வென்ற அதிமுக பெண் பிரமுகரைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக திமுக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு மொரிஷியஸ் நாட்டில் நடைபெற்ற திருமணமான பெண்களுக்கான அழகிப்போட்டியில் கோவையைச் சேர்ந்த சோனாலி பிரதீப் கலந்துகொண்டு மிசஸ் இந்தியா யூனிவர்ஸ் எர்த் - 2019 பட்டம் வென்றார். சோனாலி பிரதீப் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் அவரை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சோனாலி பிரதீப், முதலில் மார்க்கெட்டிங் மேனேஜர், சேல்ஸ் எக்ஸிகுட்டியூவ் என பல கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். இவருடைய பூர்வீகம் குஜராத் என்றாலும் இவரது குடும்பம் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.
சோனாலி பிரதீப்பின் கணவர் பிரதீப் ஜோஸ் ஒரு மலையாள சினிமா தயாரிப்பாளர். இவர் தமிழில் கடிகார மனிதர்கள் என்ற படத்தை தயாரித்துள்ளார். சோனாலி பிரதீப் - பிரதீப் ஜோஸ் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அதிமுகவில் உறுப்பினராக இருந்துகொண்டு கோவையில் சில சமூக சேவைகளையும் செய்துவருகிறார். இதனால், மிசஸ் இந்தியா யூனிவர்ஸ் எர்த் - 2019 பட்டம் வென்றபின் சோனாலி பிரதீப்பை முதல்வர் பழனிசாமி பாராட்டி வாழ்த்தினார்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சோனாலி பிரதீப் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுகவில் விருப்பமனு அளித்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவும் விமர்சனங்களையும் கலவையாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சோனாலி பிரதீப், தன்னைப் பற்றி சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகவும் ஆபசமாக சித்தரித்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சோனாலி அளித்த புகாரில், “நான் மிஸஸ் இந்தியா - 2017, மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் - 2019 ஆகிய பட்டங்களை வென்றுள்ளேன். தற்போது, அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடம் எடுத்து வருகிறேன். அ.தி.மு.க-வில் உறுப்பினராக இருந்துகொண்டு, சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறேன். உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு அளித்துள்ளேன். நான் சமூக வலைதளங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, என்னை பெண் என்றும் பாராமல் ஆபாசமாக சித்திரித்து, அசிங்கமான வார்தைகளைப் பயன்படுத்தி சிலர் பதிவுசெய்து வருகின்றனர். இதனால், நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு அவமானத்தை ஏற்படுத்தி, குடும்பத்தினர் மத்தியில் அவப்பெயரை உண்டாக்கிய அந்தப் பதிவுகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கி, அந்தப் பதிவுகளை பதிவேற்றம் செய்த நபர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சோனாலி பிரதீப் அளித்த சில சமூக ஊடகக் கணக்குகளைப் பற்றி விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து, சோனாலி மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 20வது வார்டு திமுக உறுப்பினர் ரகுபதி என்பவரைக் கைது செய்தனர். அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.