எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்தில் கலந்து கொள்ள, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டுடன் பா.ஜ.க. ஆட்சி முடிவடைய உள்ளது. இதையடுத்து, 2019-ல் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றுதிரட்டும் வகையிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் சார்பில் மார்ச் 13-ல் டெல்லியில் நடைபெற உள்ள இரவு விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மத்தியில் பா.ஜ.க. அரசை அகற்றவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பறைசாற்றவும் இந்த விருந்து பெரிதும் உதவும் என காங்கிரஸ் நம்புகிறது.
இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை, இன்று (10-03-2018) தொலைபேசியில் தொடர்பு கொண்ட, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் சார்பில் மார்ச் 13 ஆம் நாளன்று டெல்லியில் நடைபெற உள்ள இரவு விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.