திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆக செயல்பட்டு வந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர் சரஸ்வதியிடம் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோல்வி அடைந்தார்.
இவரின் தோல்விக்கு திமுகவின் உள்கட்சி பிரச்னை காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தனக்கு மாநிலங்களவை எம்.பி., கிடைக்கும் என சுப்புலட்சுமி நினைத்து வந்துள்ளார்.
மாறாக, திமுகவில் தொடர் புறக்கணிப்புகள் நடைபெற்றுள்ளன. மறுபுறம், சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் வேறு திமுகவை விமர்சித்து வந்துள்ளார்.
அண்மையில் வைகோ ஆவணப் படத்தை மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது கூட ஜெகதீசன், “1993இல் கட்சியை உடைக்க வை. கோபால்சாமி (வைகோ) எண்ணினார்.
அப்போது கருணாநிதி மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இதனை நாங்கள் அருகில் இருந்து கண்டோம். நிகழ்வுகள் நடந்து 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் அதனை மறக்க முடியவில்லை” என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போதும் ஜெகதீசன், “தமிழக அரசில் லஞ்சம் இல்லாத ஒரு துறையை சொல்ல முடியுமா? எனக் கோரியிருந்தார்.
முன்னதாக மூர்த்தி இல்ல திருமண விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின், “பத்திரப் பதிவுத் துறையில் நல்ல வருவாய் கிடைக்கிறது. மூர்த்தி பெருசா? கீர்த்தி பெருசா என்றால் எனக்கு மூர்த்தி தான் பெரிது.
அவர் ஒரு மாநாட்டையே நடத்திவிட்டார் என்று கூறியிருந்தார். இதற்கிடையில் ஜெகதீசனின் இந்த விமர்சனம் குறித்து கட்சி தலைமைக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தான் வகித்து வந்த திமுக துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
எனினும் இதுகுறித்து தலைமை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil