சென்னையில் முக்கிய போக்குவரத்தாக இருக்கும் மின்சார ரயில் போக்குவரத்தை தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி என 4 வழிகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தெற்கு ரயில்வே சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது புறநகர் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
"சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வரும் 16, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் மட்டும் சென்னை சென்ட்ரல் - பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.”