விழுப்புரம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் ஏப்ரல் மாத்திற்குள் அடிப்படை கழிவறை வசதிகள் செய்து தரப்படுமெனவும் செப்டம்பர் மாத்திற்குள் சி.சி.டி.வி கேமராக்கள் முழுவதுமாக பயன்பாட்டிற்கு வருமென தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என் சிங் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் ரயில் நிலையம் பசுமை ரயில் நிலையமாக அறிவிக்கப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிகள் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என் சிங் இன்று ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.என் சிங், ”மக்களின் தேவைக்கேற்ப விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும். ரயில் டிக்கெட்டுகள் மொபைல் ஆப் மற்றும் வெண்டிங் மெஷின் மூலம் வழங்கப்படுவதால், அதனை ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
விழுப்புரம் நிலையத்தில் மின் தூக்கி படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் சி.சி.டி.வி கேமராக்கள் பழுது ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக ரயில் நிலையம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் வைக்கப்படும். பொதுமக்கள் பாதிக்காத வகையில் அடிப்படை வசிதகளான கழிவறைகள் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.