/indian-express-tamil/media/media_files/2025/05/31/v4R4WK7HbGguQ6UdWfkS.jpg)
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா பேட்டி
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 மாதத்தில் இயல்பைவிட 97% அதிகமாக கோடை மழை பெய்துள்ளது. கோடை காலத்தில் சென்னையில் இயல்பைவிட 129% அளவுக்கு மழை கூடுதலாக பதிவாகியிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் சென்னையில் ஒருநாள்கூட 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தொடவில்லை. அதிகபட்சமாக மே 4, 5 தேதிகளில் 39.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஏதாவது ஒரு நாள் சென்னையில் கோடை காலத்தில் வெயில் 40 டிகிரியை கடந்துவிடும். ஆனால் அப்படி கடக்காத ஒரே ஆண்டு இது மட்டும்தான்" என்று கூறியுள்ளார்.
மே மாதத்தில், வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை கடந்த மாவட்டங்களை பொறுத்தவரை, வேலூர் மாவட்டத்தில் 16 நாட்கள் வெயில் 40 டிகிரியை தாண்டி பதிவாகியிருக்கிறது. இம்மாவட்டத்தில் மே.4 மற்றும் 7ம் தேதிகளில் வெயில் 41 டிகிரி என பதிவாகியிருந்தது. வேலூரை தொடர்ந்து பரமத்தி வேலூரில் 10 நாட்கள் வெயில் 40 டிகிரியை கடந்து பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் மே.15ம் தேதி 41.2 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. அதேபோல மதுரை விமான நிலையத்தில் மே.13 மற்றும் 14ம் தேதிகளில் வெயில் 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருந்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை. கடந்த சில நாள்களில் நீலகிரி, கோவை, தென்காசி, நீலகிரி, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது" என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.