மக்களவைத் தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கையில், பாதருமபுரி தொகுதியில், காலையில் இருந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், மாலை 4 மணிக்கு மேல் நிலைமை தலைகீழாக மாறியது. பின்னடைவை சந்தித்த பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் தோல்வியடைந்தார்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. பா.ஜ.க கூட்டணியில் பெரிய கட்சியாக பா.ம.க அங்கம் வகிக்கிறது. பா.ஜ.க கடைசி வரை பேச்சுவார்த்தை நடத்தி பா.ம.க-வை கூட்டணிக்குள் கொண்டுவந்தது.
பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், பா.ம.க தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்ற தொகுதி தருமபுரி என்பதாலும், அவருடைய சௌமியா அன்புமணி போட்டியிடுவதாலும் கவனிக்கப்படும் தொகுதியானது.
சௌமியா அன்புமண் தருமபுரி தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடைய மகள்களும் அவருக்காக வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார்கள். அதனால், சௌமியா அன்புமணி தி.மு.க வேட்பாளருக்கு கடும் போட்டியை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் சௌமியா அன்புமணி காலை முதல் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
அதே போல, மத்தியிலும், பா.ஜ.க ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், பா.ஜ.க கடந்த 2 முறைகளைப் போல, தனிப் பெரும்பான்மை ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்பது முடிவுகள் மூலம் தெரிகிறது. இதனால், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மட்டுமே ஆட்சி அமைக்கும் நிலைமை உள்ளது.
இதனால், தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி கட்சிகளில், தருமபுரி தொகுதியில் பா.ம.க வேட்பாளர் சௌமியா அண்புமணி மட்டுமே முன்னிலை வகித்து வந்தார். சௌமியா அண்புமணி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிகையின்போது 4 மணிக்கு மேல் 18வது சுற்றில் நிலைமை தலைகீழாக மாறியது. சௌமியா அன்புமணி படிப்படியாக பின்னடைவை சந்தித்தார். பின் தங்கியிருந்த தி.மு.க வேட்பாளர் ஏ. மணி முன்னிலைக்கு வந்தார்.
தி.மு.க வேட்பாளர் ஏ. மணி 4,18,696 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி 3,96,255 வாக்குகள் பெற்று 22,441 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார். இதன் மூலம், சௌமியா அன்புமணி தோல்வியைத் தழுவினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“