சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 8 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தெரிவித்தார்.
காரைக்குடியில் கடந்த மாதம், போலீஸ் நிலையம் அருகே மனோஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமநாதபுரம் மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த பாலமுருகன் (20), மதன்ராஜ் (19), சுரேஷ்கண்ணன் (27), சக்திவேல் (20) மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (22), குருபாண்டி (23) ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.
இதையடுத்து, சிங்கம்புணரி பகுதியில் திருட்டு வழக்கில் தொடர்புடையதாக மதுரை சேர்ந்த ராமு (31), லதா (42) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த எட்டு பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்ததை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்தின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.