/indian-express-tamil/media/media_files/2025/09/02/velumanis-2025-09-02-15-25-32.jpg)
எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் சிக்கல்: ரூ.98 கோடி முறைகேடு வழக்கில் பெயர் சேர்ப்பு
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால், இந்த வழக்கில் வேலுமணிக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்தது. இருப்பினும், கூடுதல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டால் மீண்டும் வழக்கு தொடரலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மீது விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி, புகார்தாரரான அறப்போர் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், "எஸ்.பி. வேலுமணிக்கு எதிராகப் புதிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே, அவர் மீது வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம், இந்த வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய் கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் செப்டம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பையடுத்து, ரூ.98 கோடி முறைகேடு வழக்கில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.