தலைமை செயலகத்தில், சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பரபரப்பான அரசியல் சூழலில் இந்த சந்திப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது.
முதல்வர் பழனிசாமி மீது அதிருப்தி அடைந்துள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், முதல்வர் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி கவர்னரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தினகரன் தரப்பினர் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் எனக்கூறி வருகின்றனர். இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது. அவரை பெரும்பான்மையை நிருபிக்க சொல்ல வேண்டும் என திமுக, காங்கிரஸ் கட்சியினர் கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அனைத்து எதிர்கட்சிகளும் அரசு பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது.
இந்த நெருக்கடியான சூழலை எப்படி சமாளிப்பது என்பது குறித்து முதல்வர் சட்ட வல்லூநர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று காலை தலைமை செயலகம் வந்த சபாநாயகர் தனபாலை, அவரது அறையில் முதல்வர் பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுகவின் 19 எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்துள்ளனர். இவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிகின்றன.