டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் மூன்று எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து இன்று சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் ?
முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டில் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அவர்கள் நீதிமன்றம் சென்றனர். பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின்னர், அவர்களது தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற விருக்கின்றன. அதாவது மொத்தம் 22 சட்டசபை தொகுதி என ஒரு மினி சட்டசபை தேர்தலை தமிழகம் எதிர்கொண்டு உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் அடுத்த மாதம் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான அறந்தாங்கி இரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருதாச்சலம் கலைச்செல்வன் ஆகியோரை அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் பரிந்துரை செய்தாக கூறப்படுகிறது.
இதை ஏற்றுகொண்ட சபாநாயகர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் ஆதரவாளர்களான விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி மற்றும் நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகியோரை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன