சென்னையில் இருந்து நெல்லைக்கு 21-ம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இரவு 9.55 மணிக்கு புறப்படுட்டு மறுநாள் (ஞாயிறு) காலை நெல்லைக்கு 8.45 மணிக்கு இந்த ரயில் சென்றடையும்.
தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு இந்த ரயில் சென்றடையும். மறுமார்க்கத்தில் 22 ஆம் தேதி நெல்லையில் இரவு 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சென்னை எழும்பூருக்கு காலை 8.15 மணிக்கு வந்து சேரும். 2 குளிர்சாதன 2 அடுக்கு படுக்கை பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை பெட்டிகள், 17 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் மற்றும் ரயில் மேலாளர் பெட்டி இருக்கும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
கோடை காலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் விழுப்புரம்-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விழுப்புரத்தில் இருந்து 21,22,28,29 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) காலை 4.15 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06109), அதேநாள் காலை 11.40 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கமாக, ராமேஸ்வரத்தில் இருந்து 21,22,28,29 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06110), அதேநாள் இரவு 10.35 மணிக்கு விழுப்புரம் சென்றடையும் என்று குறிப்பிட்டு உள்ளது.