கடந்த 2-ம் தேதி ஜே.பி.நட்டா சென்னைக்கு வந்தபோது குண்டு துளைக்காத வாகனமும் மற்றும் அவருடன் மத்திய பாதுகாப்பு படையினர் பயணிப்பதற்காக 2 வாகனங்களும், ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் அரசு மரபு வாகனம் மூன்றும் வழங்கப்பட்டது.கடந்த 3-ம் தேதி எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு, மதியம் அங்கிருந்து புறப்பட்டு வேலூர் பொற்கோயிலுக்குச் சென்றார். பின்னர் மாலை 5.30 மணியளவில் வேலூரில் இருந்து புறப்பட்டு மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா சென்னை திரும்பினார். இரவு 7.30 மணியளவில் வண்டலூர் -மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் திருமுடிவாக்கம் அருகில் வந்து கொண்டிருந்தனர்.
குண்டுதுளைக்க முடியாத வாகனங்கள் கொண்டவை என்பதாலும், தொழில்நுட்ப காரணங்களுக்காகவும் இவற்றை மற்ற வாகனங்களின் வேகத்திற்கு இணையாக இயக்குவதில்லை. ஆனால், மத்திய அமைச்சரின் நேர்முக உதவியாளர் வற்புறுத்தியதின்பேரில் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் இயக்கினர். அதனால் குண்டு துளைக்காத காரை மற்ற வாகனங்களுக்கு இணையான வேகத்திற்கு இயக்க முற்பட்டபோது பின்பக்க சக்கரத்தில் உருவான உராய்வு சத்தத்தை அறிந்து ஓட்டுநர் அந்த வாகனத்தை மத்திய அமைச்சரின் பாதுகாப்பு கருதி வாகனத்தின் வேகத்தை குறைத்து சாலை ஓரத்தில் நிறுத்தினார். கான்வாய் திடீரென நிறுத்தப்பட்டதால், பின்புறத்தில் இருந்த வாகனங்களில் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியதால் லேசான சேதம் ஏற்பட்டது.
உடனடியாக மத்திய அமைச்சர், அரசு மரபின்படி வழங்கப்பட்ட மாற்று வாகனத்தில் ஏற்றி உரிய பாதுகாப்புடன் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதில் அமைச்சர் பயணம் செய்த வாகனத்திற்கு எவ்வித சேதமோ அதன் உள்ளிருந்தவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு குறைபாடோ ஏற்படவில்லை என்று தமிழக காவல்துறை விளக்கமளித்துள்ளது.
வி.ஐ.பி.க்களுடன் பயணிப்பவர்கள் குண்டு துளைக்காத கார்களின் ஓட்டுநர்களை வேகமாக செல்லுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று தமிழக காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. விஐபி வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புக்குள் இயக்கப்படுவதை உறுதிசெய்ய பாதுகாப்புப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்) பிரிவுடன் இசட்-பிளஸ் அளவிலான பாதுகாப்பு நட்டாவுக்கு வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.