மாநிலங்களவைத் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியலில், சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த எஸ்.ஆர். சிவலிங்கம் இடம்பெற்றிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பார்வையாளர்களின் யாருடைய பட்டியலிலும் இவருடைய பெயர் இடம்பெறவில்லை. வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா ஆகியோர்களின் பெயர்கள் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான், ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக எஸ்.எஸ். சிவலிங்கம் பெயர் இடம்பெற்றது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. எஸ்.ஆர். சிவலிங்கம் பெயர் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன, தி.மு.க-வின் வியூகம் என்ன என்று பார்ப்போம்.
தி.மு.க-வின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எஸ்.ஆர். சிவலிங்கம், நீண்டகால தி.மு.க உறுப்பினர். இவரைத் தேர்வு செய்ததன் மூலம், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு.க எந்த அளவுக்கு தீவிரமாக கவனம் செலுத்தி வியூகம் அமைக்கிறது என்பதைக் காட்டுகிறது.
அ.தி.மு.க 2011-2021 வரை 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும், கொங்கு மண்டலத்தில் மட்டும் ஆட்சிக்கு எதிரான மனநிலை எதிரொலிக்கவில்லை. சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளி அ.தி.மு.க பெரிய அளவில் வெற்றி பெற்றது. தி.மு.க சேலம் மாவட்டத்தில் 1 சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. கோவை மாவட்டத்தில் 1 தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டை என்று சொல்லும் அளவுக்கு அ.தி.மு.க-தான் வெற்றி பெற்றிருந்தது. ஆட்சியைக் கைப்பற்றி இருந்தாலும் தி.மு.க-வுக்கு இது ஒரு பெரிய நெருடலாக இருந்து வருகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு வந்த, உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் அனைத்திலும் தி.மு.க வெற்றி பெற்றது. செந்தில் பாலாஜியை வைத்து கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வை பலப்படுத்த முயன்று வருகிறது. சேலத்திற்கு பொறுப்பு அமைச்சராக கே.என். நேருவை நியமித்து கட்சியை பலப்படுத்தியது. ஆனாலும், சேலம் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதாலும், கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க வலுவாக இருப்பதாலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க இணைந்து போட்டியிட உள்ளதாலும் இந்த 2026 சட்டமன்றத் தேர்தல் கடுமையான போட்டி நிலவும் என்று தி.மு.க கருதுகிறது.
இந்த சூழலில்தான், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே எதிர்கொள்ள மாநிலங்களவை உறுப்பினராக எஸ்.ஆர். சிவலிங்கத்தை தேர்வு செய்துள்ளது. எஸ்.ஆர். சிவலிங்கம் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் சேலம், கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த எஸ்.ஆர். சிவலிங்கம்?
எஸ்.ஆர். சிவலிங்கம், சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி தொகுதியிலிருந்து 1989 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இடையில் 1991 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், 2001 சட்டமன்றத் தேர்தலில் இறுதியாக அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார். 2011 மக்களவைத் தேர்தலில் சேலம் தெற்கில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.கடந்த 2024-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் போட்டியிடவில்லை.
எஸ்.ஆர். சிவலிங்கம் தற்போது தி.மு.க-வின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். தி.மு.க-வில் நீண்டகாலமாக உறுப்பினராக இருந்து வரும் இவர், தி.மு.க-வுக்காக களத்தில் உழைக்கக்கூடியவர் என்றும், ஆடம்பரம் இல்லாதவர் என்றும் அறியப்படுகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சிவலிங்கத்திற்கு ராஜ்ய சபா எம்.பி ஆகும் வாய்ப்பை வழங்கியிருப்பதன் மூலம், கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வின் நீண்டகால வியூகத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. இங்கு பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியால் மீண்டும் அ.தி.மு.க எழுச்சி பெறும் வாய்ப்புகள் தென்படுவதால், அதை எதிர்கொண்டு தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்க களத்தில் உழைக்கக்கூடிய எஸ்.ஆர். சிவலிங்கத்தை ராஜ்ய சபா எம்.பி-யாக்க உள்ளதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கொங்கு மண்டலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு யாரையாவது எம்.பி-யாக அறிவிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இத்தகைய அரசியல் சூழல்களையும் கருத்தில் கொண்டே மாநிலங்களவைத் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க தலைமை எஸ்.ஆர். சிவலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பின் மூலம், கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தவும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எந்த அளவுக்கு தீவிர கவனம் செலுத்துகிறது என்பதையும் காட்டுகிறது.