10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் இன்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 41-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: SRH vs MI LIVE Cricket Score, IPL 2025
நடப்பு தொடரில் ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 2 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மறுபுறம், மும்பை அணி 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறது. புள்ளிகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் இந்த இரு அணிகளும் தொடர்ந்து முன்னேற கடுமையாக போராடுவார்கள். அதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
அதன்படி, ஹைதராபாத் அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ட்ரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். ஹைதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ட்ரவிஸ் ஹெட் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதேபோல், அபிஷேக் ஷர்மாவும் 8 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் டெர்ண்ட் போல்ட் வீழ்த்தினார்.
அடுத்ததாக களமிறங்கிய இஷன் கிஷானும், நிதிஷ் குமார் ரெட்டியும் முறையே 1 மற்றும் 2 ரன்களில் ஆட்டமிழந்ததால், ஹைதராபாத் அணியினர் அதிர்ச்சி அடைந்தது. இவர்கள் இருவரின் விக்கெட்டையும் தீபக் சஹர் கைப்பற்றினார். மேலும், அனிகெட் வெர்மாவையும் 12 ரன்களில், ஹர்திக் பாண்டியா அவுட்டாக்கினார். இந்த சூழலில் க்ளாசன் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோர் ஓரளவிற்கு விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.
குறிப்பாக, க்ளாசன் அரை சதம் அடித்தார். மறுபுறம், 37 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசி 43 ரன்கள் அடித்த அபினவ் மனோகர், ட்ரெண்ட் போல்ட் பந்து வீச்சில் அவுட்டானார். க்ளாசனும் தனது பங்கிற்கு 44 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 71 ரன்கள் குவித்த நிலையில், பும்ராவிடம் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த பட் கம்மின்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
மும்பை தரப்பில் அபாரமாக பந்து வீசிய ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபக் சஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இறுதியாக 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை ஹைதராபாத் அணி குவித்தது. இதன் மூலம் மும்பை அணிக்கு 144 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அந்த வகையில், மும்பை அணியில் இருந்து ரையான் ரிக்கெல்டன் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில், ரையான் ரிக்கெல்டன் 11 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரோகித் ஷர்மா தொடர்ந்து அதிரடி காட்டி அரை சதம் அடித்தார். மறுமுனையில், வில் ஜாக்ஸ் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக, ரோகித் ஷர்மாவுடன் சூரியகுமார் யாதவ் கரம் கோர்த்தார்.
இவர்கள் இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதன்படி, 46 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசிய ரோகித் ஷர்மா 70 ரன்களில் ஆட்டமிழந்தார். 19 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்த சூரியகுமார் யாதவ் 40 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார். இறுதியாக 15.4 ஓவர்களில் மும்பை அணி 146 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.